சனாதன தர்மம்

சனாதன தர்மம்

சனி, 29 மார்ச், 2014

மகோபநிடதம்

மகோபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த
உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான்
ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும்
108 உபநிஷத்துக்களில்
இது 62வது உபநிஷத்து.

ஆறு அத்தியாயங்களில் 13, 77, 57, 131, 186,
83 சுலோகங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த
உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது.

முதல் மூன்று அத்தியாயங்களின்
மேலோட்டம்

இவ்வுபநிஷத்துக் கருத்துகள் சற்று உயர்ந்த
தத்துவங்களைக் கொண்டது. ஆதி நாராயணர்
என்று தனித்திருந்த பரம்பொருட்கடவுளின்
தியானத்திலிருந்து ஈசானர் என்ற மகாதேவரும்
நான்முகப் பிரம்மா என்ற படைப்புக்கடவுளும்
உண்டானார்கள். இது முதல் அத்தியாயம்.
பிறந்தவுடனேயே பரம்பொருள்
தத்துவத்திலேயே திளைத்தவரான சுகர் தன்
தந்தையான வியாசரிடம் கண்ணில் தெரியும்
இவ்வுலகின் ஆரம்ப முடிவுகளைப்பற்றிக்
கேட்டார். அவர் சுகரை மிதிலை மன்னன் ஜனகரிடம்
அனுப்பினார். ஜனகர் சுகருக்குச் சொன்ன
உபதேசம் இரண்டாவது அத்தியாயம்.
காணப்படுவதெல்லாம் தோற்றமே. இவையெல்லாம்
அசல் உண்மையல்ல என்ற விழிப்பு ஏற்பட்டு,
உலகவாசனை யாவும் அழிந்தால் அதுதான்
வீடு என்றும் மோட்சம் என்றும் சொல்லப்படுகிறது.
அவ்விதம் மனது சாந்தி நிலையை அடைந்தவன்
வேறொன்றையும் வேண்டுவதில்லை.

மூன்றாவது அத்தியாயத்தில் நிதாகர் என்ற
சிறுவரின் கேள்வி:
'வாழ்க்கையில் ஏற்படும்
எல்லா துக்கங்களிலும் மிகக்
கொடியது ஆசை விளைவிக்கும் துக்கம்
என்று தோன்றுகிறது.
இதனிலிருந்து மீளுவது எப்படி?'

மகோபநிஷத்தின் ஆழமான பாகங்கள்
நான்காவது ஐந்தாவது அத்தியாயங்கள் மிக
ஆழமானவை. வீடு என்ற மோட்சத்தின் வாயிலில்
நான்கு வாயில்காப்பாளர்கள் உள்ளனர்.
புலனடக்கம், ஆராய்ச்சி, மகிழ்ச்சி,
நல்லோரிணக்கம் - இவைதான் அந்த
காப்பாளர்கள். முழுமுயற்சியுடன் ஒன்றைக்
கைக்கொண்டால் அந்த
ஒன்று வயமாகும்பொழுது நான்குமே வயமாகிவிடும்.
படைப்புக்கடவுளால் மனதாலேயே படைக்கப்பட்ட
இவ்வுலகத்தோற்றமும் மனோமயமே.
எங்கு கற்பனை எழுகிறதோ அங்கு மனம்
உளதென்றறி.கற்பனை இல்லாதிருந்தால் காணும்
உலகமும் கற்பனையே என்பது விளங்கும்.
அதுதான் கைவல்யம். கற்பனையால் உதித்த
இவ்வுலகம் கற்பனையாலேயே அழியும்.
ஆன்மாவல்லாததை ஆன்மா எனக்கருதுதல்
ஒரு அஞ்ஞானம்.

ஞானபூமியின் ஏழு படிகள்:
வைராக்கியத்தை முன்னிட்டெழும் சுபேச்சை
எனும் ஆசை.
நன்னடத்தையைக் கைக்கொள்ளும் விசாரணை
எனும் அப்பியாசம்.
இவையிரண்டாலும் புலன்களின்
ஓட்டமாகிற மனது தேய்ந்து இளைப்பது,
தனுமானசி எனப்படுவது.
இவை மூன்றால் சித்தத்தில் பற்று நீங்கி
சத்வாபத்தி எனப்படும் நிலைபெறுதல்.
இதனால் ஏற்படும் அஸம்ஸக்தி,
அதாவது, பற்றற்ற திடமான ஸத்வநிலை.
பதார்த்த அபாவனை , அதாவது,
உள்ளேயும் நிலை பெறாமல் வேளியேயும்
எதையும் நாடாமல் எழும் அறிவு விளக்கம்.
இதனின் நீண்ட பயிற்சியால்
பேதமொழிந்து ஏற்படும் இயற்கையான நிட்டை;
இது துர்யகாகதி எனப்படும்.
இந்தக்கடைசிநிலைதான் ஜீவன்முக்திநிலை.
உலகில் நடக்கவேண்டிய முறை
ஜீவன்முக்தனாக, கொதிப்பற்றவனாக உலகில்
நடமாடிக்கொண்டிரு.உள்ளே ஒரு கலவரமும்
இல்லாதவனாக ஆனால் வெளியில் எல்லாக்
கருமங்களையும் செய்பவனாகவும் இரு. இவர்
உற்றார் அவர் பிறர் என்ற எண்ணமில்லாமல்
உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற பாவனையில்
இரு. அறிய
வேண்டியது எதுவுமன்றி அறிவுமயமாகிய
பரம்பொருள் நான் என்ற நிலையில்
இருந்துகொண்டிருப்பவன் பிரம்ம நிலையில்
இருப்பவன்.

இவ்வுபநிஷத்துப் பொன்மொழிகள்

அவன் எங்கோ தூரத்திலிருப்பவனல்லன்.
அவன் உளனல்லன், இல்லையல்லன்; நான்
என்பவனல்லன்; பிறனென்பவனல்லன்.
பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் என்ற
மூன்றின் மத்தியில் பார்வை மாத்திரமாக
விளங்குபவன்.(2-64,2-69)

விவேகிகளுக்கு நூல்கள் ஒரு சுமை.
விஷயப்பற்றுடையவர்களுக்கு அறிவு ஒரு சுமை.
அமைதி இல்லாதவருக்கு மனது ஒரு சுமை.
ஆன்மாவை அறியாதவருக்கு உடல் ஒரு சுமை.
(3-15)

விஷயத்தின் விஷமம் தான் விஷம்.
விஷம் விஷமல்ல. (3.54)

ஒருபொழுதும் எக்காரணத்தாலும் சங்கற்பமும்
மனதும் பிரிவதில்லை. சங்கற்பம்
இல்லாதிருந்தால் ஆன்மசொரூபம் எஞ்சி நிற்கும்.
(4-52, 4-53)

'நான் பிரம்மமில்லை ' என்ற திடமான
சங்கற்பத்தால் மனம் பந்தத்துக்குள்ளாகிறது.
'எல்லாம் பிரம்மமே ' என்ற திடமான
சங்கற்பத்தால் மனம் மோட்சத்தையடைகிறது.(4.124)
தள்ளப்படவேண்டியதை அள்ள
அலைந்து வருத்தமடையாதே.தள்ளவோ அள்ளவோ எண்
ணமில்லாது,தள்ளுவதையும் அள்ளுவதையும்
தாண்டிநிற்கும் நிலையில் திடமாக இரு. (6-28)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக